எலும்பு முறிவு

நமது உடம்பில் 206 எலும்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு எலும்பும் உறுதியானது. வலுவானது.ஆனால் எலும்புகள் ஒரு குறிப்பிட்ட அளவு எடையையும் விசையையும் மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகப்படியான எடை அல்லது விசை அந்த எலும்பைத் தாக்குகின்ற பொழுது அந்த எலும்பு வளைந்து ஒரு கட்டத்திற்கு மேல் உடைந்து விடுகிறது. இதைத்தான் நாம் எலும்பு முறிவு அல்லது பிராக்சர் என்று கூறுகிறோம்.

➤ உடைந்த எலும்புகள் நகராமல் உடைந்த பகுதிகள் ஒன்றின் அருகே ஒன்று அருகாமையில் இருக்கின்ற பொழுது அவை ஒன்றோடு ஒன்று எளிதாக கூடி விடுகின்றன.ஆனால் உடைந்த பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்கின்ற பொழுது அவை சரியாக கூடாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே அந்த எலும்புகளை சரிவரப் பொருத்த வேண்டியது அவசியமாகிறது.இவ்வாறு உடைந்த எலும்புகளை பொருத்துவதற்காக தான் பிளேட் ஸ்குரு போன்ற உபகரணங்களை நாம் பயன்படுத்துகிறோம்.உடைந்த எலும்புகளை சரியான முறையில் பொருத்தி அந்த எலும்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் சரிவர இருக்கும்படி செய்து விட்டால் அந்த எலும்புகள் முறைப்படி கூடி விடுகின்றன.

➤ சில சமயங்களில் அறுவைசிகிச்சை இல்லாமலேயே மாவுக்கட்டு போன்ற முறைகளில் எலும்புகளை சரி செய்ய முடியும். மயிரிழை அளவு உடைந்த எலும்புகளை அதிகம் நகராத முறிவுகளை மாவுக்கட்டு மூலம் அசையாமல் சில வாரங்கள் பத்திரமாக வைத்திருந்தால் எலும்பு வளர்ந்து இணைந்து விடும்.

➤ விலகிய முறிவைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது.முறிந்த எலும்புகள் தோலை விட்டு வெளியே வராமல் உடலின் உள்ளேயே இருந்தால் அது நல்ல முறையில் கூட கூடிய வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் உடைந்த எலும்பு வெளியே வந்து வெளிப்புற சூழலுடன் தொடர்பு கொண்டுவிட்டால் அந்த எலும்பு கூடுவதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் வெளிப்புற சூழலில் இருந்து தூசிகள் கிருமிகள் ஆகியவை அந்த எலும்பை பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.அதனால்தான் ஓபன் பிராக்ச்சர் சற்று ஆபத்தானது. இத்தகைய சூழ்நிலையில் கட்டாயம் ஆபரேஷன் செய்து உடைந்த எலும்பையும் சேதமான சதைப்பகுதிகளையும் சுத்தம் செய்து பொருத்த வேண்டி இருக்கும். முறிந்த எலும்பு களுக்கான சிகிச்சை மிகக்கவனமாக செய்யப்பட வேண்டியது. பல சமயங்களில் இத்தகைய சிகிச்சையை நுண்துளை அறுவை சிகிச்சை மூலமாக செய்கிறோம்.

➤ ஒரு சிறிய அளவு துவாரம் இட்டு அந்த துவாரத்தின் மூலமாகவே முறிந்த எலும்புகளை நேர் செய்து பின்னர் அந்த எலும்புகளை உலோகத் தகடுகள் அல்லது உலோக கம்பிகள் மூலமாக ஒன்றாக இணைக்கிறோம். இவ்வாறு நுண்துளை அறுவை சிகிச்சை செய்வதால் பல நன்மைகள் இருக்கின்றன .உடைந்த இடத்தை நாம் வெளிக்கொண்டு வருவது இல்லை. ஆகவே உடைந்த இடம் அதைச் சுற்றி உள்ள சதை நரம்புகள் இரத்தக்குழாய்கள் ஆகிய ஏதும் பாதிப்பில்லாமல் நாம் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. அடுத்தபடியாக உடைந்த எலும்பு விரைவாகவும் தரமாகவும் கூடுவதற்கு இந்த அறுவைசிகிச்சை உதவியாக இருக்கிறது. இரத்தம் வீணாவது இல்லை. நுண் கதிர் கருவிகளும் நுண்துளை அறுவை சிகிச்சைக்காக கண்டுபிடிக்கப்பட்ட பிரத்தியேகமான பல கருவிகளும் இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக மாற்றியிருக்கின்றன.

பொதுவாக தொடை எலும்புகள் கால் எலும்புகள் போன்ற நீளமான எலும்புகளை இத்தகைய நுண்துளை அறுவை சிகிச்சை மூலமாக இணைப்பது எளிது.சிறிய எலும்புகளை பெரும்பாலும் ப்ளேட் ஸ்குரூ போன்றவற்றை உபயோகப்படுத்தி இணைக்கிறோம்.மூட்டின் அருகாமையில் எலும்பு உடைந்து இருக்கின்ற பொழுது அந்த எலும்பை நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது சிரமமாக இருக்கும். ஆகவே தான் அத்தகைய எலும்புகளை பொருத்துவதற்கு பிளேட்ஸ் ஸகுரு போன்றவற்றை நாம் உபயோகப்படுத்துகிறோம்.

➤ எலும்புகளை ஸ்டீல் ப்ளேட்டுகள் மூலம் பொருத்தும் முறை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழக்கத்தில் உள்ளது.தற்போது டைட்டானியம் என்னும் மெட்டல் கொண்டு தயாரிக்கப்படும் ப்ளேட்டுகள்,உருளைக் கம்பிகள்,லாக்கிங் நெய்ல்கள்,எலாஸ்டிக் நெய்ல்கள் பிரபலமாக உள்ளன. இந்த இரண்டு உலோகங்களும் சிறந்தவையே. எனினும் டைட்டானியம் மிகச் சிறந்தது. உடலோடு நன்கு இணங்குவது. வினை புரியாத குணமும் துரு ஏறாத பண்பும் நிறைந்தது. தவிர எந்த ஸ்கேன்களையும் தொந்தரவு செய்வதில்லை. சற்று விலை உயர்ந்தது.

➤ உடலின் உள்ளே பொருத்தப்படும் இந்த உலோகங்கள் உறுதியானவை. கரைவதில்லை. உடைந்த எலும்புகள் நன்றாக இணைந்தபின் அவற்றுக்கு உள்ளே வேலையில்லை. எடுத்து விடலாம். ஓரிரு வருடங்கள் கடந்தபின் எலும்புகள் பழைய வலுவை அடைந்தபின் எடுத்துக்கொள்வது நல்லது.தாமாகவே கரைந்து விடும் ப்ளேட்டுகளும் ஸ்க்ரூக்களும் மிக அதிக விலை கொண்டவை. அவற்றின் வலு நாம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. இன்னமும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் விலை குறைந்த வலுவான உடலுக்கு இணக்கமான பொருட்கள் வரலாம்.

To follow/subscribe our Social Media pages